இயற்றியவர்
சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர்
மு.பெ.சத்திய வேல் முருகனார் B.E., M.A., M.Phill
*************************************
தானதன தானதனத் தந்தனதான –தானத்
தந்தனத் தானதனத் தந்தனதான
————————————————————————————
ஊன் கூட்டில் விளையாடும் உள்ளக்கிளி! – உன்
கிளியாட்டம் காணோமே முகவாட்டமேன்?
தேன்காட்டித் தித்திக்கும் தமிழையெண்ணி – தொலை
மாநிலத்தில் மூளுகின்ற மோகமறிவேன்
பிழைப்பென்னைப் பிடரியிலே உந்தித்தள்ள – பீஹார்
போய்ச்சேர்ந்தேன் பெற்றநலம் பலவானாலும்
அழைக்கின்ற தமிழ்நாட்டை யெண்ணியெண்ணி – சிந்தை
ஆழ்கின்றேன் எண்ணத்தேர் ஊர்கின்றேன்யான்
தமிழ்நாட்டின் வளமண்ணே யெனையீன்றமண் – அந்த
மண்ணீன்ற மாமொழியென் தாய்மொழியாகும்
அமிழ்தன் காவியங்கள் ஆயிரம்உண்டு – அதில்
அழியாப் பேர் கவிகளெனில் ஆயிரம் உண்டு.
எம்மொழியில் இயம்பிடுசொல் யாதானாலும் – அது
வாமனனாய் மண்ணுடனே விண்ணையளக்கும்!
செம்மொழிசொல் அவைசேர்த்துக் கவிபாடினால் – அக்
கவியூறும் தீஞ்சுவையைத் தேன்போற்றுமே!
எந்தையர்கள் இவ்வுலகில் முந்தையராவார்! – அவர்தம்
பண்பாடே மூத்ததென்றிம் மண்பாடுமே!
எந்தக்கலை இயம்பிடுவா யெதுவானாலும் – அதில்
விந்தைகளை செய்திடுவார் உலகம்வாழ்த்தவே!
காதலதில் வீரமதில் கைத்தொழில்களில் – கூறும்
அறந்தன்னில் பொருள்தன்னில் இன்பந்தன்னில்
சாதலிலா நெறிசேர்க்கும் சமயந்தன்னில் – பண்டைத்
தமிழரினம் திறமொளிராத் துறையுமுண்டோ?
மொழிசொன்னேன் இனம்சொன்னேன் மற்றிவைசீர்த்தி – மேவும்
என்னாடு என்னாடி நரம்பில்ஏறி
வழிகின்ற உணர்வுடனே உள்ளம்ஒன்ற – வாழும்
பீஹாரில் பதைக்கின்றேன் பரிவால்வாடி அங்கே
தமிழ்நாட்டின் செய்திகளைத் தேடிபடிபேன் – வரும்
தமிழ்வார இதழ்தேடி ஓடியலைவேன்
தமிழ்நாடக நாட்டியமென் றெதுநடந்தாலும் – நகரில்
எம்மூலை யென்றாலும் எழுந்தோடுவேன்
தமிழுலகம் போற்றுமொரு அறிஞர்வந்தால் – அங்கே
முகில்பார்த்த மயில்போல நடமாடுவேன்
குமிழ்கின்ற எண்ணத்தால் தமிழ்முகமென்றால் – அவரை
குறைவில்லா நட்புசெயக் கூவியழைப்பேன்
தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சூடென்றறிந்தால் – குண்டு
துளைத்தாற்போல் துவள்கின்றேன் துயர்ப்படுகின்றேன்
தமிழ்நாட்டில் தேர்தலெனச் செய்தியறிந்தால் – என்கை
அரசங்கு நிறுவுதல்போல் நானுணர்கின்றேன்
தமிழ்நாட்டின் இழிவெல்லாம் என்இழிவாகும் – அதையென்
தகவாலே தகர்ப்பதுவே என்தொழிலாகும்
என்றெல்லாம் என்உள்ளக் கிளிகூவுதே – அது
ஏக்கத்தால் போக்கற்று முகம்வாடுதே!
கன்றொன்று தாய்ப்பிரிவால் கதறுதல்போலே – உள்ளக்
கிளிசோகக் குரல்தூக்கிக் கவியாடுதே!
ஐயா,
பீகாரில் மாத்திரமல்ல தமிழகத்திலும் பல கிளிகள் உளக்கிடக்கையை வெளிபடுத்த முடியாமல் இப்படித்தான் தவித்துக் கொண்டிருக்கின்றன.